Sunday, April 4, 2010

ஒரு அணியாக செயற்படுமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு உலகத்தமிழர் பேரவை இறுதி நேர வேண்டுதல்!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.

எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது. இவ்வாறான ஒற்றுமையற்ற தன்மையானது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிரான சக்திகளுக்கு பலமானதாகப்போய்விடும் என அஞ்சுகின்றோம். அவ்வாறான நிலைமை, எமக்கு ஏற்படுகின்ற மிகப்பாரிய பின்னடைவாகவே இருக்கும்.

அதன்காரணமாக இந்த இறுதி நிமிடத்திலும் உங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு ஒரு அணியாக போட்டியில் தேர்தலை எதிர்கொள்வதன் மூலம், துணிவுடன் தமிழ் மக்களின் உரிமைகளை முன்னெடுக்கக்கூடிய வேட்பாளர்களை தெரிவுசெய்யப்படுவதை இலகுபடுத்துமாறு புலத்து தமிழ் மக்களின் சார்பாக, உலகத் தமிழர்களின் பேரவையானது வேண்டிக்கொள்கின்றது.

- என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------